» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் வேட்புமனு வினியோகம் தொடக்கம்: ஒரே நாளில் 5 பேர் வாங்கிச் சென்றனர்
செவ்வாய் 19, மார்ச் 2024 8:03:58 AM (IST)
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை, தூத்துக்குடியில் வேட்புமனு வினியோகம் நேற்று தொடங்கியது. ஒரே நாளில் 5 பேர் மனுவை வாங்கிச் சென்றனர்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் (சனி, ஞாயிற்றுக்கிழமை) தவிர வருகிற 27-ந் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 28-ந் தேதி வேட்புமனு மீது பரிசீலனையும், 30-ந் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடமும், உதவி தேர்தல் அதிகாரிகளிடமும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குவதையொட்டி நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நேற்று முதல் வேட்புமனு விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது. வேட்புமனுக்களை அதிகாரிகள் சரிபார்த்தனர்.
நேற்று நாம் தமிழ் கட்சி வேட்பாளர் சத்யா மற்றும் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடக்கூடியவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றனர். இதுவரை நெல்லை தொகுதியில் 4 பேர் வேட்புமனுவை வாங்கிச் சென்றனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்தாய் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை வினியோகம் செய்வதற்காக தனியாக அதிகாரிகள் குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த குழுவினர், மனு பெறுபவர்களின் விவரங்களை பதிவு செய்து கொண்டு மனுக்களை வழங்கி வருகின்றனர். அதன்படி நேற்று ஒருவர் மட்டும் வேட்புமனுவை வாங்கி சென்றார்.