» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்கலாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 8, ஏப்ரல் 2024 3:11:15 PM (IST)
நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "மக்களவை பொதுத் தேர்தல் 2024 க்கான தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் 16.03.2024 அன்று அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. 37, தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் முடிவுற்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை ஆகிய இனங்களை சார்ந்த 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குசாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் நாற்பது சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏதுவாக கடந்த 20.03.2024 முதல் 25.03.2024 வரை ஐந்து நாட்கள் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடுவீடாக சென்று படிவம் 12D விநியோகம் செய்யப்பட்டு, வாக்களிக்க விருப்பமுள்ள வாக்காளர்களால் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட 12D படிவங்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.
தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர்,; கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 1213 மூத்த குடிமக்கள் மற்றும் 834 மாற்றுத்திறனாளிகள் ஆக மொத்தம் 2047 நபர்கள் தபால் மூலம் வாக்கு பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து மனு செய்துள்ளனர்.
மேற்கண்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு சீட்டு வழங்குவதற்கு மண்டல அலுவலர்கள் தலைமையிலான வாக்குச்சாவடி குழு அமைக்கப்பட்டு நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் 10.04.2024, 11.04.2024, 12.04.2024 ஆகிய மூன்று தினங்கள் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த வாக்காளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று தபால் வாக்கு சீட்டு விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி தினங்களில் வீட்டிலிருந்தே தபால் வாக்கு பதிவு செய்யும் வாய்ப்பினை பயன்படுத்த ஒரு முறை தவறிய வாக்காளர்களின் வீட்டிற்கு மேற்படி குழுவானது இரண்டாவது முறையும் சென்று தபால் வாக்கினை பதிவு செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த வாக்காளர்கள் படிவம் 12D யில் குறிப்பிட்டுள்ள முகவரியில் மேற்படி தினங்களான 10.04.2024, 11.04.2024, 12.04.2024 ஆகிய தினங்களில் தவறாது வீடுகளில் ஆஜராகி வாக்கு பதிவு செய்ய தயார் நிலையில் இருக்குமாறும், மேற்படி தினங்களில் வீட்டிற்கு வருகை தரும் மண்டல அலுவலர்கள் தலைமையிலான குழுவிற்கு உரிய ஒத்துழைப்பு நல்கி இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி வாக்களிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி வாக்கு பதிவு செயல்முறையானது முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.