» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை: நயினார் நாகேந்திரன் விளக்கம்

வியாழன் 25, ஏப்ரல் 2024 11:49:49 AM (IST)

"தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை" என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு இன்று (ஏப்.25) தாம்பரம் போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க என்னை குறிவைத்து செயல்படுகின்றனர். இதனை அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன். தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் கைப்பற்றியுள்ளார்கள். ஆனால், ரூ.4 கோடியை யாரோ எங்கோ கொண்டு சென்றதில் எனது பெயரையும் சேர்த்து சூழ்ச்சி செய்கின்றனர். 

தேர்தல் பிரச்சாரத்திலேயே சொல்லிவிட்டேன். இது என்னுடைய பணம் அல்ல. அந்தப் பணத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய நிறைய பேர் எனக்கு தெரிந்தவர்கள், எனது சொந்தக்காரர்கள் தான்.

யாரையும் இதில் குறை சொல்ல விரும்பவில்லை. காவல்துறை தன் கடமையை செய்கிறது. அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வழக்கமாக காவல்துறை மிரட்டி வாக்குமூலம் வாங்கும். விசாரணைக்கு ஆஜரான பிறகே என்ன வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் என்பது தெரியும்.

யார் மீதும் அவதூறு வழக்கு தொடரப்போவதில்லை. இந்த வழக்கில் என்னை சிக்க வைக்க முடியாது. இந்த வழக்கால் எனக்கு விளம்பரம் தான் கிடைத்து வருகிறது. யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி பாதையில் பாஜக சென்று கொண்டிருக்கிறது. நிறைய இடங்களில் பாஜக வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது வெளிமாநிலங்களுக்கு பிரச்சாரம் செல்லவுள்ளேன். எனவே, கூடிய விரைவில் சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory