» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்
வெள்ளி 26, ஏப்ரல் 2024 8:46:21 AM (IST)
நெல்லையில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் சில மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுசம்பந்தமாக இருதரப்பினரும் கல்லூரி வளாகத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. நேற்று மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே மெயின் ரோட்டில் வந்து நின்று 2 கோஷ்டிகளாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து உடனடியாக நெல்லை மாநகர போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் உதவி போலீஸ் கமிஷனர்கள் பிரதீப், காமேஸ்வரன், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், நுண்ணறிவு பிரிவு ஏட்டு தினகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, அங்கு 2 கோஷ்டியாக இருந்த மாணவர்களை கலைந்து செல்லும்படி விரட்டினார்கள். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் யார்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கல்லூரி முன் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. நெல்லையில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.