» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ரூ.1¼ கோடி போதைப்பொருள் சிக்கிய வழக்கு: விஷம் குடித்த கஞ்சா வியாபாரி சாவு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:23:15 AM (IST)
நெல்லையில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள கஞ்சா சிக்கிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்த கஞ்சா வியாபாரி உயிரிழந்தார்.
ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி வழியாக பெருமளவில் போதைப்பொருள் கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தூத்துக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ஒரு சிலரது செல்போன் சிக்னல் செயல்பாடுகள் மற்றும் அவர்களது உரையாடல்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மினி லாரி மற்றும் ஒரு காரில் கஞ்சா அதிகளவில் கடத்தி செல்வதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர் அனிதா மேரி ஆகியோர் தலைமையிலான போலீசார் கஞ்சா கும்பலை பிடிக்க தூத்துக்குடி-நெல்லை ரோட்டில் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தனர்.
ஒவ்வொரு வாகனமாக சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அடுத்தடுத்து வந்த மினி லாரி, கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசாரும் வாகனங்களில் சினிமா காட்சிபோல் பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். பாளையங்கோட்டை அருகே பொட்டல் விலக்கு பகுதியில் மினி லாரியை மடக்கிப் பிடித்தனர்.
அதில் 80 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மினி லாரியை ஓட்டி வந்த கங்கைகொண்டானை சேர்ந்த நித்திஷ்குமார் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்காமல் சென்ற காரை தச்சநல்லூரில் போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த காரில் 140 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தன. இரண்டு வாகனங்களில் இருந்தும் மொத்தம் ரூ.1¼ கோடி மதிப்பிலான 220 கிலோ கஞ்சா சிக்கியது.
இது தொடர்பாக கங்கைகொண்டானை சேர்ந்த கலைஞர் பாண்டியன் மகன் சுரேஷ்குமார் (23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கலைஞர் பாண்டியனும் பிரபல கஞ்சா வியாபாரியாக இருந்தார். எனவே அவர் உள்பட மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து கலைஞர் பாண்டியன் நேற்று முன்தினம் திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் உயிரிழந்தார். கஞ்சா கடத்தல் வழக்கில் 2 பேர் கைதான நிலையில் கார் டிரைவர் அஜித், கருப்பசாமி மற்றும் மதன் ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரிய அளவில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் மற்றும் கஞ்சா வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடும்பத் தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை : அண்ணன் மகன் கைது - நெல்லையில் பயங்கரம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:04:24 AM (IST)

நெல்லை மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.14¾ லட்சம் மோசடி – கேரள வாலிபர் கைது!!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:27:12 AM (IST)

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)


