» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!

சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

2026-27 நிதியாண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நிகழவுள்ளதையடுத்து தற்போதைய திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் அவைத்தலைவர் மு. அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது,தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26(1)-ன் கீழ் தமிழ்நாடு சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன்.

இதில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவைக்கு அளிப்பார். மேலும் வருகிற 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 193(1)-ன் கீழ் 2026-27 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகளும், பேரவை விதி 189(1)-ன் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (இறுதி) பேரவைக்கு அளிக்கப்படும்.

இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதைச் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் அதாவது 16-ம் தேதி அலுவல் ஆய்வுக் குழு தலைமையில் கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சட்டப்பேரவை கூடிய நாள் முதல் என்ன பேசினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை உலகெங்கிலும் இருந்து பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சிறப்புத் தீர்மானங்கள் மானிய கோரிக்கைகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டு வருகிறது. கூட்டத்தொடர் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாக இருக்கிறது. கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தையும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory