» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!

திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)



சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் அமையவுள்ள வாக்கு எண்ணும் மையத்தைப் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாகத் திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தைப் பொதுப் பார்வையாளர்கள் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத், அனுபா ஸ்ரீவஸ்தவா, மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான இரா.சுகுமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

மாநகரக் காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தின் 1,678 வாக்குச்சாவடிகளில் இருந்து பெறப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் இந்தக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை வசதிகளுடன் வாக்கு எண்ணும் மையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டிட ஒதுக்கீடு விவரம்:

திருநெல்வேலி மற்றும் நாங்குநேரி தொகுதிகள் – நிர்வாகப் பிரிவு கட்டிடம்

அம்பாசமுத்திரம் தொகுதி – மெக்கானிக்கல் பிரிவு கட்டிடம்

இராதாபுரம் தொகுதி – கணினிப் பிரிவு கட்டிடம்

பாளையங்கோட்டை தொகுதி – மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு கட்டிடம்

இந்த மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகளும், வாக்கு எண்ணுவதற்கான அறைகளும் அமைக்கப்படவுள்ளன.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடையற்ற மின்சாரத்திற்கான ஜெனரேட்டர் வசதிகள், குடிநீர் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மேஜைகள் அமைத்தல் மற்றும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளிலும் வாக்கு எண்ணிக்கை அறைகளிலும் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பங்கேற்பாளர்கள்:

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணா, அம்பாசமுத்திரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் சேரன்மகாதேவி சார் ஆட்சியருமான ஆயுஷ் குப்தா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், திருநெல்வேலி கோட்டாட்சியர் பிரியா, மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிந்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன் (தேர்தல்), தேர்தல் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory