» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை: பலத்த பாதுகாப்பு - ட்ரோன்களுக்குத் தடை!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:34:01 PM (IST)



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகரில் ட்ரோன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று (வெள்ளிக்கிழமை) அவர் திருநெல்வேலியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலிக்கு வருகை தருகிறார். இன்று மாலை நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

சபாநாயகர் அப்பாவு (ராதாபுரம்), அப்துல் வகாப் (பாளையங்கோட்டை), சுப்பிரமணியன் (திருநெல்வேலி) மற்றும் நாங்குநேரி, அம்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்குச் சேகரிக்கிறார். நெல்லை நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் கன்னியாகுமரிக்குச் செல்கிறார். நாளை காலை (சனிக்கிழமை): கன்னியாகுமரியில் காலை 9 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

நாளை மாலை: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), ராஜா (வாசுதேவநல்லூர்), கலை கதிரவன் (தென்காசி) மற்றும் மதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் (கடையநல்லூர்), சங்கரன்கோவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோருக்காகப் பிரசாரம் செய்கிறார்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (03.04.2026) காலை 6 மணி முதல் நாளை (04.04.2026) மாலை 6 மணி வரை திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது."

இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory