» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)

நெல்லையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து 100 அடி நீளத் துணியில் தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தினர்.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா. சுகுமார் தலைமையில், வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் அருகே பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.சிவராம் ஓவியக் கலைக்கூடத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து, 100 அடி நீள வெள்ளைத் துணியில் தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.
"வாக்களிப்பது நம் உரிமை, வாக்களிப்பது நம் கடமை" என்ற வாசகங்களுடன், 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்திருந்தன. திருநெல்வேலியின் பாரம்பரியச் சிறப்பான பத்தமடைப் பாயில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து கவனத்தை ஈர்த்தனர்.
தொடர்ந்து, வரையப்பட்ட ஓவியங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இணைந்து மனிதச் சங்கிலி அமைத்தனர். பின்னர், அனைவரும் ஒன்றிணைந்து வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
நூறு கடந்த வாக்காளர்கள்:
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏர்வாடி பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 107 வயதான செல்லம்மாள் மற்றும் 102 வயதான மேரி பாய் ஆகியோரின் இல்லங்களுக்குத் தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்றனர்.
அவர்களுக்குத் தேர்தல் நாள் அழைப்பிதழுடன், 'வாக்காளர் சீர்வரிசை' தட்டு மற்றும் விழிப்புணர்வுப் பதாகைகளை வழங்கி, ஏப்ரல் 23 அன்று தவறாமல் வாக்களிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதில் சமூக நலத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Coca Cola), 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னிலையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


