» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!

சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், நண்பனின் முகத்தைக் கல்லால் சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை பெருமாள்புரம் தாமஸ் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ஜோசப் ராஜா (30), ஒரு கட்டிடத் தொழிலாளி. இவரும், தாழையூத்து அருகே உள்ள பண்டாரகுளத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி (31) என்பவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகக் கட்டிட வேலைக்குச் சென்று வந்தனர்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலை முடிந்து திரும்பிய இருவரும், இரவு நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, ஜோசப் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடசாமியிடம் வாங்கியிருந்த ரூ. 7,000 கடனைத் திருப்பித் தருமாறு மாடசாமி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த மாடசாமி, ஆத்திரத்தில் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து ஜோசப் ராஜாவைத் தாக்கியுள்ளார்.

இதில் ஜோசப் ராஜா நிலைதடுமாறி கீழே விழுந்ததும், அவரது முகத்தில் கல்லால் மீண்டும் மீண்டும் தாக்கிச் சிதைத்துள்ளார். மேலும், அவரது கழுத்தைத் துண்டால் இறுக்கியும், காலால் மிதித்தும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நள்ளிரவு 1 மணியளவில் புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்திற்குச் சென்ற மாடசாமி, தான் ஒருவரைக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக மேலப்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஜோசப் ராஜாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாடசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்களுக்கிடையே பணத் தகராறில் நடந்த இந்த விபரீதக் கொலைச் சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory