» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மைசூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டபோது ரயில்வே கேட் மீது லோடு வேன் மோதி விபத்து: தூத்துக்குடியில் பரபரப்பு!

திங்கள் 18, மே 2026 7:59:22 PM (IST)



தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட நேரத்தில், 4-ஆவது ரயில்வே கேட் மீது லோடு வேன் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் கேட் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை 05:25 மணியளவில் வழக்கம்போல் புறப்பட்டது. ரயில் பாதுகாப்பாகக் கடந்து செல்வதற்காகத் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள 4-ஆவது ரயில்வே கேட்டை அங்கிருந்த கேட்கீப்பர் முறைப்படி மூடிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்தச் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த லோடு வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மூடப்பட்டுக் கொண்டிருந்த ரயில்வே கேட் மீது பலத்த சத்தத்துடன் நேருக்கு நேர் மோதியது. 

இந்த விபத்தில் இரும்பு கேட் வளைந்து முற்றிலும் சேதமடைந்தது. மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் 4-ஆவது கேட்டை முழுமையாகக் கடந்து சென்ற பின்பு, சேதமடைந்த கேட்டை ஊழியர்களால் மீண்டும் திறக்க முடியவில்லை. இதனால், தூத்துக்குடியின் மிக முக்கியப் பிரதான சாலையான பாளையங்கோட்டை ரோட்டின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

இது குறித்துத் தகவல் அறிந்த ரயில்வே துறை பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சேதமடைந்த ரயில்வே கேட்டை தற்காலிகமாகச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதன் காரணமாகத் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் மற்றும் திருச்சி நோக்கிச் செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் உடனடியாக எட்டயபுரம் ரோடு மற்றும் மாற்றுப்பாதைகள் வழியாகத் திருப்பி விடப்பட்டன.

லோடு வேன் ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நகரின் மையப்பகுதியில் மாலையில் அரங்கேறிய இந்த விபத்துச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

நன்றிமே 18, 2026 - 09:35:49 PM | Posted IP 104.2*****

உள்ளூர் சண்டிங் லாரிகளால் இன்னும் என்னென்ன விபத்துகள் நடைபெற போகிறதோ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory