» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஒரே ஒரு மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்கள் : கிராம மக்கள் குற்றச்சாட்டு!

புதன் 1, ஜூலை 2026 5:22:46 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஒரே ஒரு மாணவிக்காக ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதும், அவர்கள் முறையாகக் கல்வி கற்பிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

விளாத்திகுளம் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தில் டிஎன்டிஏ (TN.D.T.A) என்ற அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் ஐந்து மாணவர்கள் படித்து வந்த இப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டில் 5-ஆம் வகுப்பு படிக்கும் ஒரே ஒரு மாணவி மட்டுமே எஞ்சியுள்ளார். இந்த ஒரு மாணவிக்காகப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இருவருமே அம்மாணவிக்கு முறையாகக் கல்வி கற்பிப்பதில்லை என அக்கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்துத் தகவல் அறிந்து செய்தியாளர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியின் மையப்பகுதியில் அந்த ஒரே ஒரு மாணவி மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். பள்ளியின் தலைமையாசிரியர் மேரி தெற்குப் பகுதியிலும், மற்றொரு ஆசிரியர் ஜீவா வடக்குப்பகுதியிலும் எவ்விதப் பாடமும் நடத்தாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். செய்தியாளர்களைக் கண்டதும், "உள்ளே வராதீர்கள்; எதுவாக இருந்தாலும் பள்ளி நிர்வாகத்திடம் பேசிக்கொள்ளுங்கள்" என்று தலைமையாசிரியர் மேரி முரண்பாடான வாதத்தை முன்வைத்தார். அதற்குச் செய்தியாளர்கள், "உங்களுக்குப் பள்ளி நிர்வாகமா சம்பளம் தருகிறது, அரசாங்கமா?" என்று கேள்வி எழுப்பியதும், வீடியோ பதிவிற்குக் பயந்து இரு ஆசிரியர்களும் அறையை விட்டு வெளியேறிச் சென்றனர்.

இப்பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர் மேரிக்கு மாதம் ரூ.1,30,000 ரூபாயும், ஆசிரியர் ஜீவாவிற்கு மாதம் ரூ.80,000 ரூபாயும், சமையல் உதவியாளருக்கு ₹7,000 ரூபாயும் அரசுப் பொதுப் பணத்திலிருந்து ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மின்சாரச் சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், சமையல் எரிவாயு மற்றும் எல்இடி தொலைக்காட்சி  உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு உதவிகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இவ்வளவு வசதிகள் இருந்தும், ஆசிரியர்கள் கடமைக்காக வந்து செல்லும் போக்கையே கடைப்பிடிப்பதாகவும், வகுப்பறைக் கரும்பலகையில் உள்ள தேதியைக் கூட மாற்றுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை என்றும் கிராம மக்கள் சாடுகின்றனர். எனவே, அரசு உதவி பெறும் இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கக் கல்வி அலுவலர்களும் ஆசிரியர்களும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory