» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மேகதாது அணைக்கு எதிராக டெல்லி செல்லத் தயாரா?: த.வெ.க. அரசுக்கு கனிமொழி எம்.பி. சவால்!

சனி 8, ஆகஸ்ட் 2026 10:47:42 AM (IST)



மேகதாது அணைக்கு எதிராக டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்திக்க தயாரா? என்று த.வெ.க. அரசுக்கு கனிமொழி எம்.பி. சவால் விடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், த.வெ.க. அரசு கூட்டியுள்ள எம்பிக்கள் கலந்தாய்வுக் கூட்டம் காவிரிப் பிரச்சினையைத் திசைதிருப்பும் அரசியல் நாடகம் என்றும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி காட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தீர்மானங்களை நிறைவேற்றியதுடன், பிற மாநில முதலமைச்சர்களை ஒன்றிணைத்துக் கூட்டு நடவடிக்கைக் குழுவையும் உருவாக்கிப் போராடினார்.

தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவரப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்க எதுவும் இல்லை.

தி.மு.க.வின் முதன்மை கோரிக்கைகள் ஏற்கெனவே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டன:

1971 மக்கள் தொகை அடிப்படை: 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 2026-க்குப் பிறகும் மேலும் 30 ஆண்டுகளுக்குத் தொகுதிகள் வரையறை நீட்டிக்கப்பட வேண்டும்.

பிரதிநிதித்துவ பாதுகாப்பு: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18% எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது.

சிறப்பான செயல்பாட்டிற்குத் தண்டனை கூடாது: குடும்பக் கட்டுப்பாடு மற்றும் சமூகப் பொருளாதாரத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது.

காவிரிப் பிரச்சினையைத் திசைதிருப்பும் முயற்சி:

காவிரி மற்றும் மேகதாது அணைப் பிரச்சினையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் த.வெ.க. அரசு கள்ளமௌனம் சாதிக்கிறது. மக்கள் கோரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், தொகுதி மறுவரையறை குறித்து அவசர அவசரமாகக் கலந்தாய்வுக்கூட்டம் கூட்டுவது காவிரிப் பிரச்சினையிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகும்.

மேகதாது அணை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனத் தி.மு.க. பொதுச்செயலாளர் விதித்த நிபந்தனையை த.வெ.க. அரசு நிராகரித்துவிட்டதால், இன்றைய கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது.

"தமிழ்நாட்டின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்க தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?" என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து

இந்தAug 8, 2026 - 06:18:54 PM | Posted IP 172.7*****

இந்த பொம்பிளை அடிக்கடி விமானத்தில் ஊரு ஊராக சுத்திட்டே இருக்கும், கரப்பான் பூச்சி போராட்டத்தில் போய் வந்துச்சு எந்த பயனும் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory