» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் அடிக்கல்...!!
வெள்ளி 1, மார்ச் 2024 3:03:42 PM (IST)
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் புற்றுநோய்கான கோபால்ட் 60 கதிர்வீச்சு சிகிச்சை மையக் கட்டிடப் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து மருத்துவத்துறைக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் ரூ.4 கோடி மதிப்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான அறை வசதியுடன் கூடிய புற்றுநோய்க்கான கோபால்ட் 60 கதிர்வீச்சு சிகிச்சை மையம் அமைப்பதற்கான கட்டிட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட ரூ.27.5 இலட்சம் மதிப்பிலான புனரமைக்கப்பட நோயாளிகளின் உடனிருப்போர் காத்திருப்போர் அறை (பெண்கள் மற்றும் ஆண்கள்), ரூ.19.14 இலட்சம் மதிப்பிலான புனரமைக்கப்பட்ட உயர் சிறப்பு அதிதீவிர சிகிச்சை பிரிவு வார்டு மற்றும் ரூ. 17 இலட்சம் மதிப்பிலான குருதி உறைதல் பகுப்பாய்வு கருவி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பிரின்ஸ் பயஸ், செயற்பொறியாளர் பொறி.வெள்ளைசாமி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர்கள் விஜயலெட்சுமி, ரெனிமோல், மாநகராட்சி உறுப்பினர் மோனிகா விமலா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.