» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியீடு: பா.ஜனதா பெண் பிரமுகர் கைது
வியாழன் 7, மார்ச் 2024 8:31:30 AM (IST)
பள்ளி மாணவிகள் மது குடிப்பது போன்று சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பியதாக பா.ஜனதா கட்சி பெண் பிரமுகரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 4-ந் தேதி சவுதாமணி என்பவர் அவரது எக்ஸ் தள பக்கத்தில் திராவிட மாடல் ஆட்சியில் வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமை தானே நடக்கிறது என பதிவிட்டு, அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் 15 வயது மதிக்கத்தக்க 3 பள்ளி மாணவிகள் சீருடையுடன் கையில் பாட்டிலில் மதுபோன்ற பானத்தை வைத்து குடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவை பார்க்கும்போது, யாரோ மேற்படி திரவத்தை கொடுத்து குடிக்க சொல்லி வீடியோ எடுத்து, அந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக தெரிகிறது.
இவ்வாறாக சமுதாயத்தை சீர்கெடுக்கும் விதமாகவும், அரசுக்கும், அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடும், பொதுஅமைதியை கெடுக்கும் வகையில் ஏதோ உள்நோக்கத்துடன் மேற்படி வீடியோவை பரப்பிய சவுதாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி வருண்குமார், மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சவுதாமணி மீது சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சவுதாமணி பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.