» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன் கைது : பரபரப்பு வாக்குமூலம்!!
செவ்வாய் 12, மார்ச் 2024 7:59:34 PM (IST)
சாத்தான்குளத்தில் தந்தையை கழுத்தறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வீரக்குமாரபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் வே. செல்லையா (57). கார் டிரைவராக இருந்த இவர் அந்த வேலையை விட்டு விட்டு கிடைத்த வேலைகளுக்கு சென்று வந்தார். 7 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி சரோஜா இறந்து விட்டார். இதையடுத்து சொந்த வீட்டை விற்று விட்டு, சாத்தான்குளத்தில் உள்ள கரையடி சுடலை மாடசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில் இரவில் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இவரது மகன் வேதநாயகதுரை (35) அவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லையாவுக்கு உடல்நலத்துறை ஏற்பட்டதால் நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று திங்கள்கிழமை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அன்றிரவு வழக்கம் போல் கரையடி சுடலை மாடசுவாமி கோயில் வளாக பிள்ளையார் கோயிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இன்று கோயில் வழியாக சென்றவர்கள், செல்லையா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நாகராஜன், சுரேஷ்குமார்,.ஸ்டீபன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்லையாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்தது யாரென தெரியாமல் இருந்ததால் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவின் பதிவு பார்வையிட்ட சென்றனர். அப்போது காமரா செயல்படாமல் இருந்தது தெரியவந்தது உடன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் கொலையான செல்லையாவின் மகன் சம்பந்தம் பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அவரது மகன் வேதநாயக முத்துவை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் தான் வைத்திருந்த கத்தியால் செல்லையா கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அவரது உடலை கோயில் உள்ளே இருந்து வெளியே இழுத்து போட்டு விட்டு ஓடி விட்டதாக போலீசிடம் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் தலைமையிலலான போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்டி கென்னடி பார்வையிட்டார்.