» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருவிழா: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

ஞாயிறு 24, மார்ச் 2024 7:28:19 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து வள்ளி அம்பாள் தபசுக்காக எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வருகிறார். தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்பிற்கு வரு கின்றனர். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்கின்றனர். இரவு 9 மணிக்கு மேல் கோவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இன்று இரவு சுவாமிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு குலதெய்வம் தெரியாத வர்கள் முருகப்பெருமானை தரிசித்தால் தங்கள் குலதெய்வத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உபகோவிலான நாலு மூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர விழா நடக்கிறது. உத்திரத்தை முன்னிட்டு இன்று குன்றுமலை சாஸ்தா கோவிலில் சிறப்பு அபிசேகம், அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், மின்வசதி, உள்பட அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory