» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கணேசமூர்த்தி எம்.பி., தற்கொலை முயற்சி: வைகோ, துரை வைகோ நலம் விசாரிப்பு!
திங்கள் 25, மார்ச் 2024 10:58:20 AM (IST)
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது.
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக கணேசமூர்த்தி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நலம் கருதி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த கணேச மூர்த்தி இன்று சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர், கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இது குறித்து துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கவலைக்கிடமாக உள்ளார் எனவும் தெரிவித்தார்.
உடல் நிலை சீராக இருந்தாலும் இப்போது எக்மோ சிகிச்சை கொடுத்து வரப்படுகிறது என்றார். 24-48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார். சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளதாகவும், மேலும் அனைவரும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை என்றார்.