» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு செலவில் தபால் அனுப்பி தி.மு.க. பிரசாரம்: தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. புகார்
சனி 13, ஏப்ரல் 2024 10:21:23 AM (IST)
அரசு செலவில் தபால் அனுப்பி திட்ட பயனாளிகளிடம் தி.மு.க. பிரசாரம் செய்வதாக தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் பாலமுருகன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் நடக்கும் தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் பணியாற்றி வருகிறார். ஆரணி நாடாளுமன்ற தொகுதி பெண் வாக்காளர்களுக்கும் அவர், அரசின் திட்டங்கள் அச்சிடப்பட்ட, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட கடிதத்தை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வருகிறார். அதில் அரசின் முத்திரையும், அமைச்சரின் முத்திரையும் போடப்பட்டுள்ளது.
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்பாடாகும். தமிழகம் முழுவதும் உள்ள அரசுத் திட்ட பயனாளிகளுக்கும் இதுபோன்ற தபால்கள், அரசின் செலவில் சென்றிருப்பதாக தெரிய வருகிறது. எனவே இது தொடர்பாக முதல்-அமைச்சர், அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆரணி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான செலவை தி.மு.க. மற்றும் அதன் வேட்பாளர் மீது தேர்தல் செலவாக கருத வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.