» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போதையில்லா இளைய சமுதாயம் உருவாக்குவோம் : அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்!

வியாழன் 26, ஜூன் 2025 3:40:32 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் போதையில்லா இளைய சமுதாயத்தினரை உருவாக்குவோம் என சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை இணைந்து நடத்திய சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (26.06.2025) மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஜோதியினை ஏற்றி வைத்து, பேசுகையில்-
இளைய தலைமுறை மீது நம்பிக்கை கொண்டுள்ள நம் தமிழ்நாடு முதலமைச்சர் போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்திட அறிவுறுத்தியதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றார்கள். மாணவர்களிடையே திடீர் மாற்றங்கள் தெரிந்தால் அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கி வருவதோடு, பெற்றோர்களையும், அவர்களின் குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட ஆயம், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட சுகாதார துறை, மாவட்ட பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல் துறை, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக அந்தந்த பகுதிகளில் உள்ள பெட்டிகடைகள், உணவகங்கள், மருந்தகங்கள், டாஸ்மாக் பார்கள், சந்தேகபடும்படியான இடங்களிலும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையிலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறியப்பட்டால் அவற்றை கைப்பற்றி, அழித்திடவும், விற்பனையாளர்களின் கடைகளை சீல் வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதோடு, போதைப்பொருட்களை கண்டெடுத்த கடைகளுக்கு அபராதம் விதித்து, சீல் வைக்கப்பட்டுள்ளது. 

பள்ளி கல்லுரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களை ஆசிரியர்கள் கண்காணித்து அவர்களில் மது, புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை கண்டறிந்தால் உடனடியாக அவர்களது பெற்றோர்களுக்கு தெரியபடுத்துவதோடு, காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதோடு, அதற்கென தனி வாட்ஸ்சப் நம்பர் காவல் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் இக்குழுக்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்கேற்ப காவல் துறை கைது நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு, பல்வேறு விழிப்புணர்வு குறும்படங்களை இளைய தலைமுறையினரை வைத்து எடுக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அனைவரும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை உபயோகிக்க வேண்டாம். மாணவர்கள் நல்ல முறையில் படித்து தங்கள் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைத்திட உரிய இலட்சியத்தோடு பயணிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு போதையில்லா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

முன்னதாக குமரி மாவட்டத்திற்குட்பட்ட 31 இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட விழிப்புணர்வு ஜோதியினை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து போதையைத் தவிர்ப்போம் தடுப்போம் குடும்பாய் உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். போதை விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்கள். மேலும் போதைப்பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுஇடங்களில் நாடகங்கள் வாயிலாக 10 நாட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திட வீதி நாடகக்கலைஞர் மற்றும் திரைப்பட நடிகர் சண்முக ராஜா தலைமையில் வந்த குழுவினரை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலாபானு, உதவி ஆணையர் ஆயம் ஈஸ்வரநாதன், திருப்புமுனை ஒருங்கணைப்பாளரும் மாவட்ட போதை இல்லாத இந்தியா திட்ட உறுப்பினர் முனைவர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, ராஜாஸ் பல் மருத்துவமனை கல்லூரி நிறுவனர் மரு.ஜேக்கப் ராஜா, மண்டல தலைவர் ஜவஹர், மரு.அருண்குமார், பூதலிங்கம் பிள்ளை, அகஸ்தீசன், அருண்காந்த், உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory