» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய கல்குவாரிக்கு அனுமதி அளிக்க எதிர்ப்பு : இருதரப்பினர் வாக்குவாதம்!

புதன் 17, செப்டம்பர் 2025 8:24:51 AM (IST)



ஸ்ரீவைகுண்டம் அருகே பாஜக தலைவரின் மகன் நயினார் பாலாஜியின் புதிய கல்குவாரி தொடங்க கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்து பகுதியில் ஏற்கனவே கல்குவாரிகள், கிரஷர் ஆலைகள் உள்ளன. இங்கு பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகனும், பா.ஜனதா மாநில விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளருமான நயினார் பாலாஜி பெயரில் புதிய கல்குவாரி தொடங்க விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம், ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்து பேட்மாநகரம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் பிரபு தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் மணிமேகலை, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்தினசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜனதா விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் நயினார் பாலாஜி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், த.ம.மு.க. தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துசெல்வன் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ‘‘புதிய கல்குவாரி தொடங்கினால் பொதுமக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்’’ என்று ஆதரித்து சிலர் பேசினர். ‘‘ஏற்கனவே செயல்படும் கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல் விழுந்துள்ளதாகவும், வேளாண்மை அழிந்து வருவதாகவும்’’ கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசுகையில், ‘‘அரசின் சொத்துகளை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய மகன் மற்றும் ரத்த உறவுகளுக்கு கொடுக்கக்கூடாது என்ற சட்டம் உள்ளது. இந்த கல்குவாரியின் அருகில் 300 மீட்டர் தூரத்தில் மின்சார கோபுரம், 294 மீ. தூரத்தில் ஓடை, 500 மீ. தூரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வீடுகள் உள்ளன. சிவகளை தொல்லியல் களமும் அருகில் உள்ளது. எனவே கல்குவாரிதொடங்க அனுமதிக்கக்கூடாது’’ என்றார்.

அப்போது முகிலனை தொடர்ந்து பேச விடாமல் சிலர் தடுத்து அவரிடம் இருந்த மைக்கை பறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது. உடனே போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்து முடிந்தது. பொதுமக்களின் கருத்துகள் குறித்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று உதவி கலெக்டர் பிரபு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory