» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு: தாங்க முடியாத துயரத்தில் தாய் தற்கொலை!

புதன் 25, மார்ச் 2026 5:08:57 PM (IST)

விழுப்புரம் அருகே, குளத்தில் மூழ்கி இரண்டு மகள்கள் உயிரிழந்த துயரம் தாளாமல் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு சாவடி தீர்த்தவாரி வீதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது முதல் மனைவி கவிதா இறந்துவிட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஹர்ஷினி (11), கயல் (8) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். இவர்கள் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

கடந்த 14-ஆம் தேதி கீழ்புத்துப்பட்டு இ.சி.ஆர். சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்ற ஹர்ஷினி மற்றும் கயல் ஆகிய இரு சிறுமிகளும், அங்கிருந்த குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவில் திருவிழாவின்போது நடந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இரு மகள்களையும் பறிகொடுத்த தாய் ஜெயந்தி, கடந்த சில நாட்களாக அவர்களின் நினைவாகவே அழுதுகொண்டு பெரும் வேதனையில் இருந்துள்ளார். உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலையில் அய்யனார் வயலுக்குச் சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த அய்யனார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டபோது, ஜெயந்தி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டக்குப்பம் காவல்துறையினர், ஜெயந்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு சிறுமிகளைத் தொடர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory