» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக் மீது கனிமவள லாரி மோதி விபத்து : தந்தை கண்முன்னே மகள் பலி!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:45:04 AM (IST)

தக்கலை காவல் நிலையம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியல், சிற்றாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். ராணுவ வீரரான இவர், நேற்று இரவு தனது மகள் ஹாட்லின் அபினாவுடன் இருசக்கர வாகனத்தில் தக்கலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். தக்கலை காவல் நிலையம் முன்பாக அவர்கள் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கனிம வளங்கள் ஏற்றிய கனரக லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்தக் கோர விபத்தில் லாரியின் சக்கரம் ஏறியதில், தலையில் பலத்த காயமடைந்த ஹாட்லின் அபினா, தனது தந்தை கண்முன்னேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். கிறிஸ்துராஜ் காயங்களுடன் உயிர் தப்பினார். நாட்டைக் காக்கும் பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீரரின் மகள், லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

விபத்து நடந்த உடனேயே ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய லாரியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். "கட்டுப்பாடின்றி அதிவேகமாக இயக்கப்படும் கனிமவள லாரிகளால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகின்றன" எனக் கூறி போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP), போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கனிமவள லாரிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த உரிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

காவல் நிலையம் முன்பே இந்த துயர சம்பவம் நடந்ததும், அதைத் தொடர்ந்து நடந்த சாலை மறியலும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலியான ஹாட்லின் அபினாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தக்கலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory