» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கார் விபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி காலமானார்: திரையுலகில் பெருஞ்சோகம்!

புதன் 6, மே 2026 8:33:33 AM (IST)

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் அதிபருமான ஆர்.பி.சவுத்ரி (72), ராஜஸ்தானில் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் செய்தி திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு ஆர்.பி.சவுத்ரி நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். ஜோத்பூர் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோத வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பாலத்தின் சுவரில் பலமாக மோதியது.

காரில் 'ஏர் பேக்' வசதி இருந்தும், மோதிய வேகத்தில் காரின் இடதுபுறம் பலத்த சேதமடைந்ததால், அங்கு அமர்ந்திருந்த ஆர்.பி.சவுத்ரி படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த டிரைவர் காயமடைந்தார்.

சூப்பர் குட் பிலிம்ஸ்: 1988-ல் தனது நண்பருடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பைத் தொடங்கிய இவர், பின்னர் 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் 99 படங்களைத் தயாரித்துள்ளார். 1990-ல் 'புது வசந்தம்' மூலம் தமிழில் நுழைந்த இவர், நாட்டாமை, பூவே உனக்காக, சூர்யவம்சம், துள்ளாத மனமும் துள்ளும், ஆனந்தம், ஜில்லா போன்ற எண்ணற்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

சிறந்த படங்களைத் தயாரித்ததற்காக 7 முறை மாநில அரசின் விருதுகளை வென்றுள்ளார். கடைசியாக வடிவேலு நடித்த 'மாரீசன்' படத்தை தயாரித்திருந்தார். விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், எழில் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

ஆர்.பி.சவுத்ரிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்களில் சுரேஷ் மற்றும் ஜீவன் ஆகியோர் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். மற்ற இரு மகன்களான ஜீவா மற்றும் 'ஜித்தன்' ரமேஷ் ஆகியோர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகத் திகழ்கின்றனர்.

ஆர்.பி.சவுத்ரியின் உடல் இன்று (புதன்கிழமை) சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கு இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory