» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வு ரத்து: மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க எம்பவர் இந்தியா அமைப்பு கோரிக்கை!

புதன் 13, மே 2026 8:18:24 AM (IST)

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு நிர்வாகக் குறைபாடுகளால் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு மற்றும் மறுதேர்வுக்கான பயண வசதிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பின் செயல் இயக்குநர் திரு. ஆ. சங்கர், மத்திய அரசின் உயர்கல்வித் துறை மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) அனுப்பியுள்ள கோரிக்கை மனு : நிர்வாகத் தவறுகளால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படும்போது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். 

எனவே தேர்வுக் கட்டணம், பயணச் செலவு, தங்குமிடம் மற்றும் பிற செலவுகளுக்கு ஈடாகப் பெற்றோர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கும் வகையில் தேசிய அளவிலான கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.

மறுதேர்வுக்குச் செல்லும் அனைத்து மாணவர்கள் மற்றும் அவர்களுடன் செல்லும் ஒரு பாதுகாவலருக்கு அரசு சார்பில் இலவசப் பேருந்து மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பயண வசதி செய்து தரப்பட வேண்டும்.எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் மற்றும் குழப்பங்களைத் தவிர்க்கச் சில முக்கியப் பரிந்துரைகளை எம்பவர் இந்தியா முன்வைத்துள்ளது

நான்கு கட்டத் தேர்வுகள் நீட் தேர்வை நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்தாமல், நான்கு கட்டங்களாகப் பிரித்துத் தனித்தனி வினாத்தாள்கள் மூலம் நடத்த வேண்டும். இது நிர்வாகச் சுமையைக் குறைப்பதுடன் பாதுகாப்பையும் மேம்படுத்தும்.

மாணவர்களின் சிரமத்தைக் குறைக்க, அவர்களின் சொந்த மாவட்டம் அல்லது அருகிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும். புகார் தீர்வு முறைமை: மாணவர்கள் தங்களின் புகார்களை எளிதாகப் பதிவு செய்யும் வகையில் காலக்கெடுவுடன் கூடிய வெளிப்படையான புகார் தீர்வு மையத்தை அமைக்க வேண்டும்.

நிர்வாக ரீதியான தவறுகளுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்தி மத்திய அரசு இந்தக் கோரிக்கைகளை அவசரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory