» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் நிலைப்பாடு என்ன? – சீமான் கேள்வி!

வெள்ளி 24, ஜூலை 2026 5:47:01 PM (IST)

SemanPk.jpg

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை தவெக அரசு ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தவெக அரசு மத்திய அரசிடம் இதுவரை எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த தவெக அரசு, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது.

ஆனால், நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், பரந்தூரிலிருந்து திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றத் தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். இது பரந்தூர் விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை தவெக அரசு தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால், திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மத்திய பாஜக அரசிடம் இதுவரை கோரிக்கை விடுக்காதது ஏன்? முந்தைய திமுக ஆட்சியின் போது விளைநிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராகப் பரந்தூருக்கே நேரில் சென்றது முதல்வர் விஜய்க்கு நினைவிருக்கிறதா? அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்குத் தவெக அரசின் பதில் என்ன?

எனவே, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது பற்றித் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" எனச் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory