» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்? - தமிழ்நாடு அரசு பரிசீலனை!

புதன் 29, ஜூலை 2026 4:02:08 PM (IST)

tasmac43.jpg

தமிழ்நாட்டில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, டாஸ்மாக் மதுபானக் கடைகளின் சில்லறை விற்பனையை மீண்டும் தனியாரிடம் ஒப்படைப்பது குறித்துத் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 2003-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை மதுபானக் கடைகள் தனியாருக்கு ஏலம் மற்றும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், அதில் முறைகேடுகள் நடந்ததாகவும், அரசுக்குக் கிடைக்க வேண்டிய உரிமக் கட்டண வருவாய் பாதிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, தனியார் மதுக்கடைகளின் உரிமங்களை ரத்து செய்து, அதே ஆண்டு நவம்பர் 29 முதல் சில்லறை மது விற்பனையை டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசின் முழுப் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சட்டவிரோத விற்பனை மற்றும் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. முதற்கட்டமாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காகத் தேவையான 'மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்திருத்த மசோதா', வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது 4,048 சில்லறை டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. 2024–25 நிதியாண்டில் மதுபானங்களுக்கான ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரி (VAT) மூலம் மட்டும் மாநில அரசுக்கு ரூ. 48,344 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

டாஸ்மாக் கடைகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதால் அரசுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான வருவாய் இழப்பை ஈடுகட்டவும், மாற்று வருவாய் ஆதாரங்களைக் கண்டறியவும் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory