» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 10:29:24 AM (IST)



மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து 57 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் (11), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கருத்துகள்:

தென் மாநிலங்கள் பாதிப்பு: மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் தொகுதி மறுவரையறையால் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எம்.பி.க்கள் எண்ணிக்கை: தற்போதுள்ள 543 மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையிலேயே ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேசுவதற்கான நேரம் குறைவாக உள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் கருத்துகளை முழுமையாக எடுத்துக்கூற முடியாது.

அமெரிக்க முன்மாதிரி: அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கேற்ப உயர்த்தப்படுவதில்லை என்ற கருத்து சுட்டிக்காட்டப்பட்டது.

50% ஆசை வார்த்தை: அனைத்து மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% வரை உயர்த்தலாம் எனக் கூறப்படுவது மக்களைத் திசைதிருப்பும் ஆசை வார்த்தை (Illusion to sweeten the pill) என எம்.பி.க்கள் குறிப்பிட்டனர்.

எம்.பி.க்களின் முதன்மையான கோரிக்கைகள்:

தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவையே நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான தொகுதிகளின் பகிர்வை மாற்றாமல் இருக்கத் தேவையான சட்டத் திருத்தங்களைப் நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்.

தற்போதுள்ள மக்களவை : மாநிலங்களவை விகிதமான 2.2:1 என்ற அளவை அப்படியே பராமரிக்க வேண்டும்.

தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அதிகார வரம்பை நாடாளுமன்றமே இறுதி செய்ய வேண்டும்.

சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்:

தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்ற இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநிறுத்தவும், தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory