» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொகுதி மறுவரையறை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தீர்மானம் நிறைவேற்றம்!

புதன் 12, ஆகஸ்ட் 2026 3:51:11 PM (IST)

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இன்று காலை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை செய்யப்படவுள்ள நிலையில், மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலங்கள், தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது. அவர்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது மத்திய அரசின் கடமையாகும். மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தை மாற்றம் செய்யாமல் தற்போதைய நிலையிலேயே நிலைநிறுத்த வேண்டும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதைய 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே வருகிற 2029 மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு அம்சத்தை மட்டும் ஆதரித்தன.

தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் வெற்றி பெற்று நிறைவேற்றப்பட்டதாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory