» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தஞ்சையில் காவல்துறை அதிகாரியை தாக்கியதாக கைதான இளைஞர் ஒரே நாளில் விடுதலை!

புதன் 19, ஆகஸ்ட் 2026 4:19:32 PM (IST)

TanjoreATtack.jpg

தஞ்சையில் மறியல் போராட்டத்தின் போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர், ஒரு நாள் நீதிமன்றக் காவலுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

தஞ்சையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மாநாட்டு விளம்பர பேனரை மாநகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாகக் கூறி அகற்றியது. இதனைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற இளைஞர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் வழிவிடுமாறு வாக்குவாதம் செய்தார்.

இளைஞருக்கும் கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகாமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தலையிட்டார். அப்போது ஆகாஷ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் அவரைத் தாக்கியுள்ளார். பதிலுக்கு ஆகாஷும் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீமைத் தாக்கியுள்ளார்.

இதையடுத்து, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் நடத்துதல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 7 சட்டப் பிரிவுகளின் கீழ் (BNS) ஆகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 38 பேர் மீதும் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீசார் முதலில் இளைஞரைத் தாக்கியதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது:  இளைஞர் ஆகாஷ் போலீசாரைத் தொடர்ந்து ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசியதால், நிலைமையைக் கட்டுப்படுத்தவே குறைந்தபட்ச பலப் பிரயோகம் பயன்படுத்தப்பட்டது.

ஆகாஷ் மீது ஏற்கனவே பெண் ஒருவரைத் தாக்கிய வழக்கு உட்பட பிற புகார்களும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் ஆகாஷ், ஒரே நாள் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory