» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலி சதம் வீண்: இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்று நியூசிலாந்து சாதனை!

திங்கள் 19, ஜனவரி 2026 8:23:48 AM (IST)


இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று ெதாடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. விராட் கோலி சதம் அடித்தும் பலன் இல்லை.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பகல்-இரவு மோதலாக நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் களம் புகுந்த நியூசிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹென்றி நிகோல்ஸ் (0) அர்ஷ்தீப் சிங்கின் முதல் ஓவரிலேயே போல்டானார். டிவான் கான்வே (5 ரன்) ராணாவின் வேகத்தில் சிக்கினார். அடுத்து வந்த வில் யங் 30 ரன்களில் வெளியேறினார். அப்போது நியூசிலாந்து 58 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (12.1 ஓவர்) இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல்லும், கிளென் பிலிப்சும் கைகோர்த்து படிப்படியாக அணியை சரிவில் இருந்து மீட்டனர். அந்த அணி 25 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய டேரில் மிட்செல் தனது 9-வது சதத்தை பூர்த்தி செய்தார். நடப்பு தொடரில் இது 2-வது சதமாகும். இந்தியாவுக்கு எதிராக 4-வது சதமாகும். அத்துடன் அந்த அணி 200 ரன்களையும் (35.4 ஓவர்) தாண்டியது. செஞ்சுரிக்கு பிறகு அவர் மேலும் ஆக்ரோஷமாக ஆடினார். சிறிது நேரத்தில் பிலிப்ஸ் தனது 2-வது சதத்தை அடித்தார்.

அணியின் ஸ்கோர் 277 ஆக (43.1 ஓவர்) உயர்ந்த போது பிலிப்ஸ் 106 ரன்களில் (88 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) அர்ஷ்தீப்சிங்கின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் பிடிபட்டார். மிட்செல் - பிலிப்ஸ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அடுத்த ஓவரில் டேரில் மிட்செல்லும் (137 ரன், 131 பந்து, 15 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். 

கடைசி கட்டத்தில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் (28 ரன், 18 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஸ்கோர் 330-ஐ கடக்க உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 337 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பின்னர் 338 ரன் என்ற மெகா இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணிக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. தொடக்க வீரர் ரோகித் சர்மா (11 ரன்) போல்க்ஸ் வீசிய சற்று எழும்பி வந்த பந்தில் எளிதில் கேட்ச் ஆனார். முன்னதாக அதே ஓவரின் 3-வது பந்தில் விக்கெட் கீப்பர் மிட்செல் ஹே கேட்ச்சை நழுவ விட்ட நிலையில் கிடைத்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய ரோகித் சர்மா கடைசி பந்தில் விக்கெட்டை தாரை வார்த்தார். 

2-வது விக்கெட்டுக்கு விராட் கோலி நுழைந்தார். மறுமுனையில் கேப்டன் சுப்மன் கில் (23 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (3 ரன்), லோகேஷ் ராகுல் (1 ரன்) ஏமாற்றம் அளித்தனர். 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி திண்டாடியது. இதைத் தொடர்ந்து கோலியுடன், நிதிஷ்குமார் ரெட்டி இணைந்து சரிவை தடுத்ததுடன், அரைசதத்தையும் கடந்தனர். நம்பிக்கை துளிர் சற்று எட்டி பார்த்த சமயத்தில், நிதிஷ்குமார் ரெட்டி (53 ரன், 57 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா (12 ரன்) நிலைக்கவில்லை.

விக்கெட் சரிவுக்கு மத்தியில் விராட் கோலி தனிநபராக போராடினார். 7-வது விக்கெட்டுக்கு அடியெடுத்து வைத்த நிதிஷ் ராணா அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. இருவரும் அவ்வப்போது பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். கோலி 91 பந்துகளில் தனது 54-வது சதத்ைத நிறைவு செய்தார். சிறிது நேரம் வாணவேடிக்கை காட்டிய ஹர்ஷித் ராணா 52 ரன்களில் (43 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ேபால்க்ஸ் வீசிய புல்டாஸ் பந்தில் அடங்கினார். 

கடைசியில் விராட் கோலி 124 ரன்களில் (108 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) பந்தை சிக்சருக்கு தூக்கியடிக்க முயற்சித்த ேபாது கேட்ச் ஆனார். அத்துடன் இந்தியாவின் நம்பிக்ைக சுக்கு நூறானது. முடிவில் இந்திய அணி 46 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி கண்டிருந்தது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை டேரில் மிட்செல் (2 சதம் உள்பட 352 ரன்) பெற்றார்.

சாெந்த மண்ணில் சோகம்!

2019-ம் ஆண்டுக்கு பிறகு சாெந்த மண்ணில் ஒரு நாள் தொடரை இந்திய அணி இழப்பது இதுவே முதல்முறையாகும். அதே நேரத்தில் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் 1988-ம் ஆண்டில் இருந்து இரு நாட்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இந்தியாவுக்கு எதிரான முந்தைய 7 ஒரு நாள் தொடரில் தோற்று இருந்த நியூசிலாந்து அணி, அந்த நீண்ட கால சாேகத்துக்கு தற்போது முடிவு கட்டி புதிய வரலாறு படைத்துள்ளது. இதே போல் 2024-ம் ஆண்டில் இந்திய மண்ணில் அந்த அணி டெஸ்ட் தொடரை முதல்முறையாக 3-0 என்ற கணக்கில் வென்றது நினைவிருக்கலாம்.

அடுத்து இந்தியா- நியூசிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் வருகிற 21-ந்தேதி நாக்பூரில் நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory