» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மில்க்ஷேக்கில் விஷம் கலந்து தந்தையை கொன்ற பெண் காவலர்: 3 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்!

ஞாயிறு 29, மார்ச் 2026 10:41:26 AM (IST)



மகாராஷ்டிர மாநிலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை, விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு கருணை அடிப்படையில் காவலர் பணியில் சேர்ந்த பெண்ணின் கொடூரச் செயல் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலமாகியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்த் பல்லாவர் (45). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் ஆர்யா, ஆஷிஷ் என்பவரைத் தீவிரமாகக் காதலித்து வந்தார். இவர்களது காதலுக்குத் தந்தை ஜெயந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஆர்யா, தனது காதலன் மற்றும் உறவினர் உதவியுடன் ரூ.5,000 கொடுத்து விஷம் வாங்கியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி, வேலைக்குக் கிளம்பிய தந்தைக்குப் பாசமாகப் பேசுவது போல நடித்து, மில்க்‌ஷேக்கில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதனை அருந்திவிட்டுப் பணிக்குச் சென்ற ஜெயந்த், அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அப்போது இச்சம்பவம் இயற்கை மரணம் எனக் கருதப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது. தந்தை மறைவைத் தொடர்ந்து, ஆர்யாவிற்குத் துரிதமாகக் கருணை அடிப்படையில் காவலர் பணி கிடைத்தது. காதலன் ஆஷிஷும் காவலர் பணியில் சேர்ந்தார். இருவரும் திருமணமும் செய்துகொண்டனர்.

சமீபத்தில் ஒழுங்கீனமான நடத்தை காரணமாக ஆஷிஷ் காவலர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே ஆர்யாவுக்கும், ஆஷிஷுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஆஷிஷ், காவல் நிலையத்திற்குச் சென்று, "3 ஆண்டுகளுக்கு முன்பு நானும் ஆர்யாவும் சேர்ந்துதான் அவரது தந்தையை விஷம் வைத்துக் கொன்றோம்" என உண்மையை உடைத்தார்.

இந்த வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார், வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். இறுதியில் ஆர்யா, அவரது ஆஷிஷ், உறவினர் சைதன்யா மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையையே கொன்றுவிட்டு, அதே சீருடை அணிந்து 3 ஆண்டுகள் பணியாற்றி வந்த மகளின் செயல் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

இதுMar 30, 2026 - 08:09:50 AM | Posted IP 162.1*****

தான் வடை நாட்டு பீடாவாயன் கலாசாரம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory