» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பெருந்துயரம்: படகு கவிழ்ந்து பஞ்சாப் சுற்றுலா பயணிகள் 10 பேர் பலி!

சனி 11, ஏப்ரல் 2026 3:59:52 PM (IST)



உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் உயிரிழந்தனர்.

மதுரா மாவட்டம் பிருந்தாவனம் பகுதியில் உள்ள யமுனை நதியில் நேற்று மதியம் படகு சவாரி நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். நதியின் ஆழமான பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்றினால் நிலைதடுமாறி ஆடியது. கட்டுப்பாட்டை இழந்த படகு, அங்குள்ள மிதவை பாலம் மீது பலமாக மோதி கவிழ்ந்தது. இதில் படகிலிருந்த பயணிகள் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.

தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் 50-க்கும் மேற்பட்ட உள்ளூர் நீச்சல் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் மேலும் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. விபத்தில் சிக்கியவர்களில் 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மாயமான சிலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த மற்றும் மீட்கப்பட்ட அனைவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மற்றொரு விபத்து

இதேபோல், மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள நர்மதா ஆற்றிலும் நேற்று ஒரு படகு விபத்து நிகழ்ந்தது. ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க தரிசனத்திற்காகப் பக்தர்கள் சென்ற படகு, ஓம்கார் மாத் மற்றும் நகர் கட் பகுதிகளுக்கு இடையே சென்றபோது பாறையில் மோதி கவிழ்ந்தது.

இருப்பினும், படகிலிருந்த பக்தர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக உயிர்காக்கும் கவசங்களை (Life Jackets) அணிந்திருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆற்றில் விழுந்த 10 பக்தர்களையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory