» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி மாணவர் மீது மீண்டும் தாக்குதல்: நெல்லை மாவட்ட காவல் துறை விளக்கம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:30:27 PM (IST)
நாங்குநேரி கல்லூரி மாணவர் சினனத்துரை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சின்னத்துரை (18), திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது தாய், தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வருகின்றனர். சின்னத்துரை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வணிகவியல் நிறுவன செயலாளர் (B.Com. - Corporate Secretaryship) துறையில் படித்து வருகிறார். நேற்று (ஏப்.16) மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
சுமார் 7.30 மணியளவில் ஒரு அறிமுகம் இல்லாத அலைப்பேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவல் தெரிந்த காவல் துறையினர் சம்பவ இடம் சென்று வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னத்துரையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சின்னத்துரையிடம் விசாரித்த பொழுது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப் பகுதிக்கு சென்றதாகவும் பின்னர் அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் தன்னிடம் பணம் கேட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லாததால் கட்டையால் அடித்து வலது கையில் காயம் ஏற்படுத்தி தன்னிடமிருந்த அலைப்பேசியை பறித்து சென்றதாகவும் தெரிவித்தார்.
கல்லூரி மாணவரிடம் காவல் துறையினர் விசாரணைக்காக சின்னத்துரையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் கேட்ட பொழுது தனக்கு மறந்துவிட்டதாக கூறினார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்டபொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாக கூறுகிறார். சின்னத்துரையின் கையில் ஏற்பட்ட சிறிய காயத்துக்கு சிகிச்சை முடித்து தனது சொந்த விருப்பத்தின் பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் என்று அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சின்னத்துரை கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி வீட்டில் இருந்தபோது, 3 பேர் கும்பல் புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இச்சம்பவம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று இந்த மாணவர் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
