» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)
ஆலங்குளம் அருகே பனை விவசாயி சுடப்பட்ட விவகாரத்தில், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சி போலீசாரின் ஆரம்பக்கட்ட விளக்கத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சேட் மகன் மணிகண்டன் (32) தனது தோட்டத்தில் கள் இறக்குவதாகப் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க, கடந்த 7-ம் தேதி ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (SI) இசக்கிராஜா மற்றும் இரண்டு காவலர்கள் மணிகண்டன் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
தோட்டத்திற்குச் சென்று கள் இறக்கப்படுகிறதா எனச் சோதனையிட முற்பட்டபோது, மணிகண்டனின் உறவினரை எஸ்.ஐ இசக்கிராஜா தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மணிகண்டன் மற்றும் இசக்கிராஜா இடையே மோதல் உருவானது. அப்போது இசக்கிராஜா தனது துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதில், மணிகண்டனின் இரண்டு கால்களிலும் குண்டுகள் பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.
மணிகண்டன் தங்களைக் கம்பால் தாக்கியதால், தற்காப்பிற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எஸ்.ஐ இசக்கிராஜா தெரிவித்தார். எஸ்.ஐ சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், ஆத்திரத்தில் ஏற்பட்ட மோதலின் போது கம்பு தவறுதலாக எஸ்.ஐ மீது பட்டதாகவும், ஆனால் அவர் திட்டமிட்டே சுட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், சம்பவத்தன்று எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில்: உதவி ஆய்வாளர் இசக்கிராஜா சீருடை அணியாமல் (மஃப்டியில்) இருக்கிறார். மணிகண்டன் ஓட்டும் இருசக்கர வாகனத்தின் பின்னால் இசக்கிராஜா அமர்ந்து செல்கிறார்.
சம்பவம் நடந்த சமயத்தில் மணிகண்டன் மரத்தில் கள் இறக்கிக் கொண்டிருக்கவில்லை; அவர் தனது வீட்டில்தான் இருந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், மணிகண்டன் தாமாகவே முன்வந்து எஸ்.ஐ-யை தனது வாகனத்தில் அழைத்துச் சென்றதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது. இது 'தற்காப்புக்காகச் சுட்டோம்' என்ற போலீஸ் தரப்பு வாதத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, மணிகண்டன் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், எஸ்.ஐ இசக்கிராஜா உட்பட 3 காவலர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இசக்கிராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி ஆதாரம் இந்த வழக்கில் மிக முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)


