» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலை வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
புதன் 25, ஜூன் 2025 10:19:19 AM (IST)
சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் 22.06.2020-ம் நாள் அப்படுகொலைகள் தமிழ்நாடு காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் சி.பி.சி.ஐ.டி முதலில் விசாரிக்கத் தொடங்கிய நிலையில், பின்பு மத்திய அரசின் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இப்படுகொலைகள் தொடர்பாக அன்றைய சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர் உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 105 சாட்சிகளிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில் ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. கால அவகாசம் கோரியதன் விளைவாக, படுகொலை நிகழ்ந்து ஐந்தாண்டுகளாகியும் இதுவரை வழக்கு விசாரணை முடிவடையவில்லை.
அதிகாரத்தில் உள்ளவர்களால் நிகழ்த்தப்பட்டு நாட்டையே உலுக்கிய மிகக்கொடூர படுகொலை நிகழ்வான சாத்தான்குளம் படுகொலைகளின் வழக்கு விசாரணையே இத்தனை ஆண்டுகள் காலதாமதம் எனில், வெளியே தெரியாத சாமானியர்களின் கொலை வழக்குகளில் நீதி கிடைக்க எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
கொலை செய்யப்பட்டவர்கள் யார், எங்கே கொலை செய்யப்பட்டார்கள், எப்படி கொலை செய்யப்பட்டார்கள், ஏன் கொலை செய்யப்பட்டார்கள், கொலை செய்தவர்கள் யார் என்ற அனைத்தும் தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தும், அதற்கான சாட்சிகள் அனைத்துமிருந்தும் ஐந்தாண்டுகள் ஆகியும் விசாரணை நிறைவடையாதது ஏன்? ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கால அவகாசம் கேட்பதும், அதை நீதிமன்றம் அனுமதிப்பதும் ஏன்? யாரைக் காப்பாற்ற, யாருடைய உத்தரவின் பேரில் சி.பி.ஐ. இப்படி காலதாமதம் செய்கிறது?
பொள்ளாச்சி பாலியல் வழக்கு முடிய 5 ஆண்டுகள், ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலை வழக்கில் 5 ஆண்டுகள் என நாடறிந்த வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆகின்றது எனில், சுப்ரீம் கோர்ட்டு வரை மேல்முறையீடு செய்யப்பட்டு இறுதி தீர்ப்பு கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
தாமதித்து வழங்கப்படும் நீதி அநீதிக்கு சமம் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், நீதிமான்களும் எப்போது உணரப்போகிறார்கள்? குற்றவாளிகளே மரணித்துபோகும் வரை, குற்ற வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பது என்பது இந்த நாட்டில் மட்டுமே நிகழும் மிகப்பெரிய சாபக்கேடாகும்.
ஆகவே, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத்தந்து ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்திற்கு உரிய நீதியை விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!
வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)

அஜித்குமாரின் உடலில் 50 இடங்களில் காயங்கள் : பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 11:19:18 AM (IST)

வகுப்பறையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 10:58:15 AM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

திருச்செந்தூரில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள் : கனிமொழி எம்.பி., ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 7:57:02 AM (IST)

திமுக ஆட்சி கட்டுப்பாட்டில் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது: கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
வியாழன் 3, ஜூலை 2025 7:46:42 PM (IST)

தமிழ்நாட்டில் இதெல்லாம் சகஜம்Jun 25, 2025 - 11:51:50 AM | Posted IP 172.7*****