» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் வெங்கடாஜலபதி அலங்காரத்தில் காட்சி தந்த பெருமாள் - திரளான பக்தர்கள் தரிசனம்!

சனி 11, அக்டோபர் 2025 11:04:27 AM (IST)



தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

புரட்டாசி மாதம் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். காக்கும் கடவுளான பெருமாளை புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வணங்கினால் நாம் வேண்டுவதை அளித்து நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அருள் புரிவார் என்பது இந்துக்களில் நம்பிக்கை.

இதனால் பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதன்படி இன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 4-வது சனிக்கிழமை விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி 4-வது சனிக்கிழமை விழா கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி காலை 5 மணிக்கு கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.

இந்த மாதம் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாள் சத்தியநாராயணா அலங்காரத்திலும், 2-வது சனிக்கிழமையில் குருவாயூரப்பன் அலங்காரத்திலும், 3-வது சனிக்கிழமை பத்மாவதி தாயார் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதுபோல் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான இன்று திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பெருமாளை தரிசிப்பது புண்ணியம் என்பதாலும், புரட்டாசி மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி மற்றும் 7 வகையான பிரசாதங்கள்  வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory