» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்: மோகன் சி லாசரஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

வியாழன் 25, டிசம்பர் 2025 8:28:52 AM (IST)

இயேசு கிறிஸ்து அவதரித்த இந்நாளில் உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் என்று நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் பிறந்துவிட்டாலே உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டம் ஆரம்பமாகும். அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் கிறிஸ்தவ தேசங்களான ஐரோப்பிய தேசங்கள் மற்றும் அமெரிக்க தேசம் மட்டுமல்லாமல் இஸ்லாமிய தேசமான வளைகுடா நாடுகளிலும் கிறிஸ்துமஸ் பாடல்கள் ஒலிப்பதை இன்றும் கேட்க முடிகிறது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழி பேசக்கூடிய மக்கள் மத்தியிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு குறிப்பிட்ட தேசத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கான கடவுள் அல்ல. அவர் சர்வ லோகத்தின் ஆண்டவர்.

எல்லா மக்களுக்கும் இரட்சிப்பை கொண்டு வருவதற்காகத்தான் இயேசு கிறிஸ்து ஒரு சாதாரண மனிதனாக இந்த பூமியில் அவதரித்தார். இயேசு கிறிஸ்து அவதரித்த இந்நாளில் உங்கள் வாழ்க்கையில் ஒரு அதிசயம் நடக்கும். நீங்கள் இந்த வருடம் முழுவதும் ஏதோவொரு காரியத்தை எதிர்பார்த்து, ஒன்றும் நடக்கவில்லையே? என்று எண்ணி கலங்கி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? கலங்காதிருங்கள் ஏனென்றால் இந்த மாதத்தில் உங்களுக்கு ஒரு அதிசயம் நடக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் அதிசயத்தை கர்த்தர் உங்களுக்கு செய்வார். ஏனென்றால் அவர் அதிசயங்களை செய்யும் தேவன். இன்று அந்த அதிசயம் உங்களுடைய வாழ்க்கையில் ஆரம்பிக்கும்.  

கர்த்தர் உங்களுக்கு அதிசயத்தை செய்ய ஆவலோடு காத்திருக்கிறார். அவர் நம்மோடு இருந்தால் போதும். நம்முடைய வாழ்க்கையில் அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கும். அதிசயங்களை செய்யும் கர்த்தர் இன்று உங்களுக்கும் அதிசயம் செய்வார். உங்கள் வாழக்கையில் காணப்படும் தடைகள் யாவும் நீங்கும், வழிகள் திறக்கும் அதிசயம் நடக்கும். எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள். அதே வேளையில் பண்டிகையின்போது மகிழ்ச்சிக்காக கடன் வாங்கி வீண் செலவு செய்யாதீர்கள். 

அதிசயமான இயேசு கிறிஸ்து நம்மோடு இருப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி. இந்த பண்டிகை நாட்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அனைவருக்கும் என் அன்பின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory