» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தைக் காக்கவே நாம் வந்துள்ளோம் : சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் உரை!

சனி 15, ஆகஸ்ட் 2026 10:16:55 AM (IST)

cmvijayFlag.jpg

லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து தமிழகத்தைக் காக்கவே நாம் வந்துள்ளோம் என்று  சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாக தேசியக் கொடியேற்றிய முதல்வர் விஜய் உரையாற்றினார. 

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதலாவது சுதந்திர தின விழாவில் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் இன்று காலை மூவர்ணத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

காலை 8:00 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே வந்தடைந்ததும், சென்னை காவல்துறையின் மோட்டார் சைக்கிள்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து வரக் கோட்டைக்கு அழைத்து வரப்பட்டார்.

காலை 8:35 மணியளவில் கோட்டைக்கு வந்த அவரைத் தலைமைச் செயலாளர் சாய்குமார் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

காலை 8:45 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் விஜய் மூவர்ணத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது காவல்துறை இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைக்க, மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கொடியேற்றியதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முதலமைச்சர் விஜய் பேசியதன் முக்கிய அம்சங்கள்: "என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு எனது வீர வணக்கம். அனைவரும் இணையும் இடத்தில் சாதி, மதம், இனம் நொறுங்கிப்போகும்."

தமிழகத்தைச் சூழந்துள்ள லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் ஒருவகை விடுதலையே. லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து தமிழகத்தைக் காக்கவே நாம் வந்துள்ளோம். வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. லஞ்சம் வாங்குவதைப் பொதுமக்கள் புகார் செய்யத் தனி வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது."

மாநிலத்தின் கொள்கைக்கு எதிரான விஷயங்களை அரசு நிச்சயம் எதிர்க்கும். மத்திய அரசுடன் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு இருக்கும் அதேவேளையில், தமிழகத்தின் நலனுக்கு எதிரான திட்டங்களைத் தீர்க்கமாக எதிர்ப்போம்.

கடந்த அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் எதுவுமே கைவிடப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா உணவகம்’ தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 100 நாள் வேலைத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது."

"அரசு பொறுப்பேற்ற இந்த 3 மாத காலத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருக்கோவில் நிலங்கள் முழுமையாகக் கணக்கெடுக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன."

பொது வாழ்வில் எந்தக் காரணத்தைக் கொண்டும் சமரசம் இருக்கக் கூடாது; மக்கள் நலனே நமக்கு முக்கியம். நான் உட்பட இந்த அரசில் உள்ள அனைவரும் உங்களது சேவகர்கள். நமது அரசுக்கு எதிராக வரும் எதிர்ப்புகளையும் சதிகளையும் முறியடிப்போம். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்!" என்றார். 

பின்னர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகளையும், பதக்கங்களையும் முதலமைச்சர் விஜய் வழங்கிப் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory