» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோல்விக்கு நானே காரணம் - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உருக்கம்!

திங்கள் 6, ஏப்ரல் 2026 11:28:56 AM (IST)



ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணியிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விக்குத் தானே முழுப் பொறுப்பு எனச் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 251 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய சிஎஸ்கே, 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்த சீசனில் சிஎஸ்கே சந்தித்த ஹாட்ரிக் தோல்வியாகும். மேலும், கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இது இந்தத் தொடரின் 7-வது தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேட்டிங்கில் ஏமாற்றம்:

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடும் ஏமாற்றம் அளித்தனர். குறிப்பாக, சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகிய மூவருமே ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

தோல்விக்குப் பிறகு பேசிய ருதுராஜ் கூறியதாவது: "நாங்கள் பேட்டிங் செய்தபோது எனது பங்களிப்பைச் சற்று கூடுதலாக வழங்கியிருந்தால், நிச்சயம் இந்த ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும். இன்றைய தோல்விக்கு நானே முழுப் பொறுப்பு.

இவ்வளவு பெரிய இலக்கை விரட்டும்போது 200 ரன்களுக்கு மேல் எட்டியது சற்று ஆச்சரியமாக இருந்தது. சர்பராஸ் கான், பிரஷாந்த் வீர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். சிவம் துபேவும் தனது பங்கிற்குப் போராடினார்.

முதல் இன்னிங்ஸின்போது டிம் டேவிட்டின் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அது 'நோ-பால்' ஆக அமைந்தது. அதேபோல் விராட் கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் நாங்கள் நழுவவிட்டோம். அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். 14 ஓவர்கள் வரை ஆட்டம் எங்களுக்கே சாதகமாக இருந்தது, அதன் பிறகுதான் திசை மாறியது,” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

தொடர் தோல்விகளில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வரும் ஏப்ரல் 11-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory