» சினிமா » செய்திகள்

பேயை விட ஏஐ-யைப் பார்த்தால் தான் பயமாக இருக்கிறது : நடிகர் சந்தானம் கலகல பேச்சு!!

ஞாயிறு 8, மார்ச் 2026 1:30:36 PM (IST)



சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நடைபெற்ற இணையவழி (சைபர்) குற்றத்தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியில் நடிகர் சந்தானம் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலையிலிருந்து கண்ணகி சிலை வரை நேற்று நடைபெற்ற இந்தப் பேரணியைச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் சந்தானம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: "முன்பெல்லாம் திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து திருடினார்கள். ஆனால் இப்போது வீடியோ கால் மூலமாகவே உங்கள் இடத்திற்கே வராமல் திருட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த எல்லா குற்றங்களுக்கும் நம் கையில் இருக்கும் செல்போனே தொடக்கமாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எனப் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துகிறோம். போனை சும்மா வைப்பதில்லை; வாழைக்காய் பஜ்ஜி போடுவது போல எப்போதும் போனைத் தடவிக்கொண்டே இருக்கிறோம். இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் சைபர் குற்றவாளிகள் நம்மை எளிதாக ஏமாற்றுகிறார்கள்."

தொடர்ந்து தனது பாணியில் பேசிய அவர், "இப்போது பேயைப் பார்த்துப் பயப்படுவதை விட, ஏஐ (AI - செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பார்த்துப் பயப்படுவதுதான் அதிகமாகிவிட்டது. எனவே, சைபர் மோசடிகள் தொடர்பாகப் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் மோசடிக்குள்ளானால், உடனடியாக 1930 என்ற உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய துணை ஆணையர் ஸ்ரீநாதா, "கடந்த 2025 ஜனவரி 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை 3,692 இணையவழி குற்றப் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 164 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று குறிப்பிட்டார்.
விழிப்புணர்வுப் பேரணி

இப்பேரணியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் ஆன்லைன் வர்த்தக மோசடி, டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடி மற்றும் சமூக வலைதளங்களை கவனமாகக் கையாள்வது குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர். இந்த நிகழ்வில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கார்த்திகேயன், துணை ஆணையர் கீதாஞ்சலி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory