» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!

செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)

GermaniKamakshitemp.jpg

ஜெர்மனியின் ஹாம் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழாவில் ஜெர்மனி அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஜெர்மனியின் நார்த் ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாகாணத்தில் உள்ள ஹாம் நகரில், அங்கு வாழும் தமிழர்களால் 1985-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் நிறுவப்பட்டது. இக்கோவிலில் ஆண்டுதோறும் 2 வார காலம் நடைபெறும் திருவிழா, ஜெர்மனியில் தமிழர்களின் முக்கியக் கலாச்சார நிகழ்வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு ஜூலை 26 அன்று நடைபெற்ற திருவிழாவில் ஜெர்மனி அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் கலந்துகொண்டார். கோவிலில் அம்பாளைத் தரிசித்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்துச் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்வில் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பேசியதாவது: "ஜெர்மனியின் மதப் பன்முகத்தன்மையின் மிக முக்கிய அங்கமாக இங்குள்ள இந்து சமூகத்தினர் விளங்குகின்றனர். சமுதாய ஒருங்கிணைப்பு, மதநல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையைப் பேணுவதில் இவர்கள் முன்னோடியாக உள்ளனர்.

ஒரு நல்ல அண்டை வீட்டாராக எவ்வாறு இணக்கமாகவும் நட்பாகவும் வாழ முடியும் என்பதற்கு ஜெர்மனியில் உள்ள தமிழ் சமூகத்தினர் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர். மேலும், இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு ஜெர்மனிக்கு வந்து, இந்நாட்டைத் தங்களின் புதிய தாயகமாக மாற்றிக்கொண்ட தமிழ் மக்களின் உழைப்பையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்நிகழ்வில், அங்குள்ள தமிழர்களுடன் அதிபர் கலந்துரையாடினார். ஜெர்மனி அதிபரின் இந்த வருகை, அந்நாட்டில் வாழும் இந்திய மற்றும் தமிழ் வம்சாவளி மக்கள் மீது அவர் வைத்துள்ள மதிப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory