» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பேனர்களை அகற்ற வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
வியாழன் 26, அக்டோபர் 2023 3:04:41 PM (IST)
நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, மாநகரில் பல இடங்களில் திமுக சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பல பேனர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேனர் வைக்கும் கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த கோரி வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசுவாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு அவசர வழக்காக இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், தனபால் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசு தரப்பு மற்றும் நெல்லை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம், ‛‛பேனர்கள் வைக்க அனுமதி பெறப்பட்டதா?'' என கேள்வி கேட்டனர். அதற்கு அவர்கள் இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து மதியம் 2.15 மணிக்குள் திருநெல்வேலியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும்'' என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.