» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் சன்னியாசி அடித்துக் கொலை: கஞ்சா போதை ஆசாமி கைது

சனி 28, அக்டோபர் 2023 12:18:39 PM (IST)

தென்காசியில் சன்னியாசி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

தென்காசி யானை பாலம் படித்துறை அருகே கடந்த 24ந் தேதி சன்னியாசி ஒருவர் சாமி சிலையால் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், முதற்கட்டமாக, உயிரிழந்த நபர் தென்காசி அருகே உள்ள மேலப்புலியூர் பகுதியை சேர்ந்த சங்கரன் நாராயணன் (55) என்பதும், அவர் பலரிடம் யாசகம் பெற்று அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.

தொடர்ந்து, அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். யானை பாலம் சிக்னல் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.  அப்பொழுது, மூன்று நபர்கள் படித்துறை பகுதியில் இருந்து வெளியே செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த காட்சிகளில் பதிவான ஒரு நபர் தென்காசி காவல் நிலைய பகுதியில் உள்ள பழைய குற்றவாளியான முகமது அலி என்ற கஞ்சா அலி (36) என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, சங்கரநாராயணனை கொலை செய்தது தான்தான் என முகமது அலி என்ற கஞ்சா அலி ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு உடந்தையாக அவரது நண்பர்களான சுடலை குமார் மற்றும் ரசாக் ஆகிய இருவரும் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையின் போது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான 3 நபர்களும் கொலை நடந்த தினத்தன்று கடுமையான கஞ்சா போதை இருந்த நிலையில், மேலும் கஞ்சா வாங்குவதற்கு பணம் இல்லாமல் தென்காசி நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர்.

இந்த நிலையில், யானை பாலம் பகுதியில் உள்ள படித்துறையில் சங்கரநாராயணன் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த கஞ்சா போதை ஆசாமிகள் அவர் யாசகம் பெற்று வைத்திருந்த பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது, சுதாரித்துக் கொண்ட சங்கரநாராயணன் எழுந்து கூச்சலிடவே ஆத்திரமடைந்த முகமது அலி என்ற கஞ்சா அலி அருகில் இருந்த சாமி சிலையை எடுத்து சங்கரநாராயணனின் தலையில் போட்டுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே துடிதுடித்து சங்கரநாராயணன் உயிரிழக்கவே,  மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து, தற்போது கஞ்சா அலியை கைது செய்துள்ள போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த சுடலை குமார் மற்றும் ராசாக் ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory