» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மதுபோதை தகராறில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை : நண்பர்கள் வெறிச்செயல்

ஞாயிறு 29, அக்டோபர் 2023 10:09:20 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவான நண்பர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் பூதத்தான். இவருடைய மகன் பிரபு (31). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. கல்லிடைக்குறிச்சி புது அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் மாயாண்டி (29), கூலி தொழிலாளி. நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டின் வளாகத்தில் மது குடிக்க சென்றனர். 

அப்போது அவர்கள் தங்களுடன் சக நண்பர்கள் 2 பேரையும் மது குடிக்க அழைத்து சென்றனர். பிரபு, மாயாண்டி உள்ளிட்ட 4 பேரும் மது அருந்தியபோது, அவர்களுக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மாயாண்டி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அரிவாளால் பிரபுவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மாயாண்டி உள்ளிட்ட 3 பேரும் தப்பி சென்றனர்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த பிரபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினர். தலைமறைவான மாயாண்டி உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். கல்லிடைக்குறிச்சியில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory