» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின்சாரம் தாக்கி விவசாயி-மகன் பலி: மின்வேலி அமைத்த 3 பேர் கைது

திங்கள் 30, அக்டோபர் 2023 8:19:18 AM (IST)

மணிமுத்தாறில் வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி-மகன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர். அங்கு வேட்டைக்காக மின்வேலி அமைத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 55), விவசாயி. இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு பேரின்பராஜ் (28), சரவணன் ஆகிய 2 மகன்கள். பேரின்பராஜ், தந்தை பேச்சிமுத்துவுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம், அங்குள்ள மணிமுத்தாறு 40 அடி கால்வாய் அருகில் உள்ளது. அந்த நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு பேச்சிமுத்து, பேரின்பராஜ் ஆகிய 2 பேரும் தங்களது வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றனர். வயல் அருகில் நடந்து சென்றபோது, திடீரென்று அவர்கள் 2 பேர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் நிலைதடுமாறி கால்வாய் தண்ணீரில் விழுந்த பேச்சிமுத்து, பேரின்பராஜ் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள், மணிமுத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் மணிமுத்தாறு போலீசார், அம்பை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.கால்வாயில் இறந்து கிடந்த பேச்சிமுத்து, பேரின்பராஜ் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கால்வாயில் தண்ணீர் குடிக்க வரும் மான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வயல்வெளி அருகில் சிலர் முறைகேடாக மின்வேலி அமைத்து இருந்ததும், இரவில் அந்த வழியாக பேச்சிமுத்து, பேரின்பராஜ் ஆகிய 2 பேரும் நடந்து சென்றபோது மின்வேலியில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக அயன்சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த வேம்பு மகன் மதிவாணன் (35), ஆறுமுகம் மகன் பெரியசாமி (32), முத்தையா மகன் சுப்பிரமணியன் (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி, மகனுடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory