» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அ.தி.மு.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை: நெல்லை அருகே பட்டப்பகலில் பயங்கரம்

செவ்வாய் 31, அக்டோபர் 2023 8:14:49 AM (IST)

நெல்லை அருகே பட்டப்பகலில் அ.தி.மு.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொைல செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது உறவினரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நெல்லை அருகே உள்ள கொங்கந்தான்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசிங் மரியராஜ் (50). இவர் கொங்கந்தான்பாறை அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். மேலும் கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் காண்டிராக்ட் வேலையும் செய்து வந்தார். இவருக்கு பரஞ்சோதி பெல்லா என்ற மனைவியும், வேதபர்னபாஸ், ஜோனி பெனியேல் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த உறவினர் தங்கராஜ் மகன் கார் டிரைவரான தாஸ் (29).

நேற்று முன்தினம் அந்த ஊரில் ஆபிரகாம் என்பவர் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்வதற்காக நேற்று கல்லறை தோட்டத்தில் குழி தோண்டும் பணி நடந்தது. அதை பார்த்துவிட்டு ஜெயசிங் மரியராஜ் மதியம் 2 மணி அளவில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தாஸ், அவரை வழிமறித்து தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் தாஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயசிங் மரியராஜை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் ஜெயசிங் மரியராஜிக்கும், தாசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

மேலும் தாஸ் ஜல்லிக்கற்கள் விற்பனை செய்யும் புரோக்கராகவும் செயல்பட்டு வந்தார். இதனால் ஜல்லிக்கற்கள் விற்பனை செய்வதிலும் அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெயசிங் மரியராஜை, தாஸ் வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய தாசை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. நெல்லை அருகே பட்டப்பகலில் அ.தி.மு.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொைல செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory