» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இளம்பெண் கொலை வழக்கு; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணி இடைநீக்கம்
வெள்ளி 8, டிசம்பர் 2023 8:15:50 AM (IST)
நெல்லை அருகே இளம்பெண் கொலை வழக்கை முறையாக விசாரிக்காததால் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆசீர் பாண்டியன். இவருடைய மகள் தங்கத்தாய் (வயது 20). பிளஸ்-2 படித்துவிட்டு கங்கைகொண்டான் சிப்காட் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தங்கத்தாய்க்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் அவர் தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறினார். இதை அவருடைய தம்பி முத்து (19) கண்டித்தார். இதனால் அக்காள் -தம்பி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த பிரச்சினை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கத்தாயை, முத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இதற்கிடையே தங்கத்தாய் கொலை நடப்பதற்கு முன்பாக ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக தாழையூத்து போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக முறையாக விசாரிக்காததால் தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் தனிப்பிரிவு போலீஸ்காரர் சரவணன் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேற்று உத்தரவிட்டார்.