» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் படை வீரர் கொடி நாள் தேநீர் விருந்து
வெள்ளி 8, டிசம்பர் 2023 12:16:00 PM (IST)
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேநீர் விருந்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி கலந்து கொண்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கொடி நாள் விழா கூட்டம் நேற்று (07.12.2023) மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.நமது நாட்டின் முப்படையையும் சார்ந்த இராணுவ வீரர்களின் தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இக்கொடி நாள் வசூல் நிதியானது போரில் ஊனமுற்றவர்கள்/ உயிர்நீத்த படை வீரர்களின் கைம்பெண்கள் முன்னாள் இராணுவத்தினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொடி நாள் வசூலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
தென்காசி மாவட்டத்திற்கு கொடி நாள் வசூல் இலக்கு ரூ.39,00,000/-ஆக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது. நமது மாவட்ட அலுவலர்களின் சீரிய முயற்சியால் 06.12.2023 வரை ரூ.32,16,000/- வசூலிக்கப்பட்டு முன்னாள் படை வீரர் நல இயக்ககத்திற்கு செலுத்தி குறியீடு இலக்கு 82.46 விழுக்காடு எய்திடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சுமார் 3647 முன்னாள் படை வீரர்கள் மற்றும் விதவையர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 2023 ம் ஆண்டில் மட்டும் 1073 பயனாளிகளுக்கு ரூ.2,44,91,320/- நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
06 முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு நலத்திட்ட உதவியாக ரூ.1,34,504/-ம், போர்ப் பணி ஊக்க மானியத் திட்டத்தின் கீழ் ஒரே மகன் (வாரிசு) மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட மகன்களை ராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோர்களை கெளரவித்து 04 பெற்றோர்களுக்கு ரூ.1000/- மதிப்புள்ள வெள்ளிப் பதக்கங்கள் இவ்விழாவின் போது மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.பத்மாவதி தெரிவித்தாவது, முன்னாள் படை வீரர்கள் அவர்களை சார்ந்தோர்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கொடி நாள் நிதியிலிருந்து வழங்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் இராணுவ வீரர்களின் சேவையை கருத்தில் கொண்டு தங்களால் இயன்ற வரையில் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் முன்னாள் படைவீரர் நலன் ராமகிருஷ்ணன், லெப்டினன்ட் கர்னல் எஸ். சம்சு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) ஷேக் அப்துல் காதர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், முன்னாள் படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.