» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வார்டுகளில் அடிப்படை பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு: ஊராட்சித் தலைவர் தகவல்!
திங்கள் 11, டிசம்பர் 2023 5:32:33 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி சாதாரண குழுக்கூட்டம், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஊராட்சி சாதாரண குழுக்கூட்டம், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அ.செல்வலெட்சுமி , மாவட்ட ஊராட்சி செயலாளர் விசாலி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வெள்ள நீர் கால்வாய் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வெள்ளநீர் கால்வாய் பணிக்கு சிறு பாலம், பெரிய பாலங்கள் அமைத்து விரைவாக அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நிதி ஒதுக்கீடுக்கு பரிந்துரை செய்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்களுக்கும் இம்மன்றம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தீவிர முயற்சியால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிஉள்ளார்கள். திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் ரூ.3 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்பட்டு வரும் வியாழக்கிழமை 14.11.2023 அன்று சென்னைக்கு அனுப்பிவைப்பதற்கு இம்மன்றத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சிக்குழு மூலம் அனைத்து ஊராட்சி உறுப்பினர்களுக்கு தங்களது வார்டுகளில் அடிப்படைபணிகள் மேற்கொள்வதற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வார்டுகளில் அடிப்படை வசதிகள் தேவை இருப்பின் என்றால் மாவட்ட ஊராட்சிக்குழுவிற்கு தெரியப்படுத்தினால் தங்களது வார்டுகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கு இம்மன்றம் மூலம் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் மழை காலங்களில் நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் போன்ற நோய்தொற்று ஏற்படாமல் தங்களது வார்டுகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஊராட்சித் தலைவர் தெரிவித்தார். கூட்டத்தில், ஊராட்சி கவுன்சிலர்கள் கனகராஜ், பாஸ்கர், சாலமன்டேவின், ஜான்ஸ்ரூபா, லிங்கசாந்தி, அருண் தவசுப்பாண்டியன், மகேஷ்குமார், சத்தியவாணிமுத்து, கிருஷ்ணவேணி, தனித்தங்கம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் .